தொடக்கப்பள்ளிகளில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வான யூபிஎஸ்ஆர் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று மக்களவையில் வலியுறுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட யூபிஎஸ்ஆர் தேர்வினால், தொடக்கப்பள்ளி மாணவர்கள், தங்களின் ஆறு ஆண்டு கல்வியில் எந்தவொரு இலக்கில்லாமல் கல்வியை தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர் என்று பெரிக்காத்தான் நேஷனலின் பாலிங் எம்.பி. ஹாஸ்ஸான் சாட் குற்றஞ்சாட்டினார்.
மாணவர்கள் தங்களின் தொடக்க கல்வியை முடித்து விட்டு, இடைநிலைப்பள்ளியில் முதலாம் பாரத்திற்கு செல்வதற்கு முன்னர் அவர்களின் ஆறு ஆண்டு கால கல்வியின் அடைவு நிலையை மதிப்பீடு செய்யும் ஓர் அளவுக்கோலாக யூபிஎஸ்ஆர் தேர்வு விளங்கியது.
இதன் மூலம் இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் அடுத்த கல்வி இலக்கை உறுதி செய்வதற்கு அவர்களின் ஆற்றலையும்,பலவீனத்தையும் பெற்றோர்கள் கண்டறிந்து, தேவையான பரிகாரப் போதனையை முன்னெடுப்பதற்கு யூபிஎஸ்ஆர் தேர்வு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தது என்று ஹாஸ்ஸான் சாட் குறிப்பிட்டார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆறு ஆண்டு கல்வி அடைவு நிலையை விழிப்பாக இருந்த கவனிப்பதற்கும்,அதன் முடிவை தெரிந்து கொள்வதற்கும் தொடக்கப்பள்ளிகளுக்கான பதிய பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்வுதான் யூபிஎஸ்ஆர் ஆகும். இந்த தேர்வு, மாணவர்களின் கல்வித் தரா தரத்தை மதிப்பீடு செய்வதற்கு இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பெரும் துணைப் புரிந்தன.
ஆனால், அரசாங்க அளவில் எந்தவொரு கல்விச் சோதனையும் இல்லாமலேயே மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு நகர்த்திக் கொண்டு செல்வது என்பது மாணவர்கள் உரிய இலக்கை நோக்கி கற்றல், கற்பித்தலில் தீவிர கவனத்தை செலுத்துவார்கள் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என்று அந்த எதிர்க்கட்சி எம்.பி. வாதிட்டார்.
மாணவர்களின் கல்வித் திறன்களை உறுதி செய்வதற்கு அரசாங்க அளவில் நடத்தப்படும் தேர்வுகள் இன்றியமையாத ஓர் அடிப்படையாகும்.
2021 இல் யூபிஎஸ்ஆர் அகற்றப்பட்டுவிட்டது. பிதி 3 தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது. அப்படியென்றால் நமது கல்விக் கொள்கை எதை நோக்கி செல்கிறது என்று ஹாஸ்ஸான் சாட் வினவினார்.