புலியினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ரப்பர் பால் மரவெட்டுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று காலையில் கிளந்தான் , குவா மூசாங், கம்போங் டோல் என்ற இடத்தில் ரப்பர் தோட்டத்தில் நிகழ்ந்தது.
36 வயதுடைய ஷபாய்னி என்று அடையாளம் கூறப்பட்ட ஓர் இந்தோனேசியத் தொழிலாளி புலியின் தாக்குதலுக்கு ஆளானதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபோ தெரிவித்தார்.
உடலில் கழுத்து, கைகால்கள் மிக கொடூரமாக கடித்து குதறப்பட்ட நிலையில் அந்த தொழிலாளியின் முழுமையற்ற உடல், ரப்பர் தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக சிக் சூன் ஃபோகுறிப்பிட்டார்.
வேலைக்கு சென்றவர் காணவில்லை என்று கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து வனவிலங்கு தேசிய பூங்காவான பெர்ஹிலித்தான் உதவியுடன் போலீசாரும், SAR ( சார் ) மீட்புப்படையினரும் தேடும் பணியில் , ஈடுபட்டு இருந்த போது அந்த தொழிலாளி உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.