கோலாலம்பூரில் வங்காளதேச பத்திரிகையாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டு, கடத்தப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மூன்று போலீஸ்காரரர்களில் ஒருவர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளையில் மேலும் இருவரை பணி இடை நீக்கம் செய்யப்படுவது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவைப் பொறுத்து இது குறித்து தீர்மானிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
வங்காளதேச பத்திரிகையாளர் மிரட்டப்பட்டது, கடத்தப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் சிலாங்கூர் மாநில போலீசாரின் விசாரணை அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக டத்தோ அல்லாவுடின் குறிப்பிட்டார்.
மூன்று போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட இந்த கடத்தல் நடவடிக்கை தொடர்பான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.