மலேசிய இந்திய சமூகத்திற்கு மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. மஇகாவிலிருந்து வெளியேறிய சிலாங்கூர் மாநில முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் பி. புனிதன் தலைமையில் வரும் டிசம்பர் மாதம் மத்தியப்பகுதியில் அந்த புதிய அரசியல் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாக இக்கட்சி தோற்றுவிக்கப்படும் என்று தெரிகிறது. பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் உரிமை என்ற புதிய அரசியல் கட்சி தோற்றுவிக்கப்படட நிலையில் அடுத்த ஒரு வாரத்திலே மற்றொரு இந்திய புதிய அரசியல் கட்சி உதயமாவதற்கான அறிவிப்புகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
மலேசிய மக்கள் தொகையில் 6.6 விழுக்காடாக இருந்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கையில் , மற்றொரு புதிய அரசியல் கட்சியின் வரவின் மூலம் இந்திய சமூகத்திற்கு அது ஒன்பதாவது அரசியல் கட்சியாக திகழுவிருக்கிறது.
ஏற்கனவே மஇகா, IPF, மக்கள் சக்தி, மலேசிய இந்திய ஐக்கிய கட்சியான மியூப் ( MIUP ), ஒன்றுப்பட்ட IPF, கிம்மா, மீரா, உரிமை ஆகிய கட்சிகள் தலைகாட்டி வரும் நிலையில் தற்போது மேலும் ஓர் புதிய அரசியல் கட்சி உதயமாகிறது.