புத்ராஜெயா,ஜன.5
அரசாங்கத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் SD சத்தியப் பிரமாண வாக்குமூலம் இனி பயன்படாது என்று துணைப்பிரமரும், அம்னோவின் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெளிவுபடுத்தியுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கட்சித் தாவல் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் யாரை பிரதமராக தேர்வு செய்வது, யார் தலைமையிலான அரசாங்கத்தை தாங்கள் விரும்புகின்றனர் என்று சத்தியப் பிரமாணம் வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கக்கூடிய SD பிரகடனம், இனி செல்லுப்படியாகாது என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
பிரதமரை அல்லது அரசாங்கத்தை மாற்றுவது என்றால் இனி, en bloc ( என் புளோக் ) முறையில் ஒரு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த முடிவாக இருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் முடிவை பொறுத்து அமையாது என்று அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.
சரவா மாநிலத்தின் முதல்வரும், GPS கட்சியின் தலைவருமான அபாங் ஜொஹாரி ஒபெங், ஒற்றுமை அரசாங்கத்திற்கு தமது ஆதரவை தொடர்ந்து வழங்குவதாக உறுதி அளித்து விட்டார். இதன் பொருள், அந்த கூட்டணியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கட்சித் தலைவரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதே கட்சித் தாவல் தடை சட்டத்தின் தாத்பரிகமாகும் என்று துணைப்பிரதமர் விளக்கினார்.