கெடா மாநிலத்தில் தைப்பூச பொது விடுமுறையை மாநிலத்தின் நிரந்தர வருடாந்திர விடுமுறையாக்கும் பரிந்துரையை மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமாட் சனுசி முஹமாட் நோர் நிராகரித்துள்ளார்.
கெடா மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக வழங்கக்கூடிய வருடாந்திர பொது விடுமுறையின் கூடிய பட்ச கோட்டா எண்ணிக்கை , முடிந்து விட்டது. எனவே தைப்பூச பொது விடுமுறையை நிரந்தர வருடாந்திர விடுமுறையாக்கும் திட்டம், மாநில அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கெடா மாநிலத்தில் தைப்பூச விடுமுறையை நிரந்தர விடுமுறையாக்குவதற்கு அவ்விடுமுறை, மாநில அரசாங்கத்தின் அரசிதழில் “கெஸட்” செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கெடா மந்திரி பெசார் சனூசி பதில் அளித்துள்ளார்.
எனினும் கெடா மாநிலத்தில் வருடாந்திர நிரந்தர விடுமுறை தொடர்பான விரிவான விளக்கமளிப்பை சனூசி வழங்கவில்லை. அதேவேளையில் மாநிலத்தில் வருடாந்திர நிரந்தர விடுமுறையை யார் முடிவு செய்வார், கூடுதல் பட்ச பொது விடுமுறையின் கோட்டா எண்ணிக்கை என்ன முதலிய விவரங்களை சனூசி விவரிக்கவில்லை.