மலேசியாவில் இந்திய சமூகத்தை வளப்படுத்துவதில் அவர்களின் சமூக உருமாற்றுத் திட்டத்தின் அமலாக்கங்கள் மீள் ஆய்வு செய்யப்படும் என்று தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகொ டாகாங் அறிவித்துள்ளார்.
இந்த மறு கட்டமைப்பானது, ஆக்கப்பூர்வமான பலனை அளிப்பதுடன், மலேசியாவில் இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார மேம்பாடுகள் தொடர்பான விவகாரங்களை தொடர்ந்து கையாளுவதற்கு தமது தலைமையிலான தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு தயாராக இருப்பதாக அமைச்சர் டத்தோ ஏரன் அகொ டாகாங் குறிப்பிட்டார்.
கல்வி, பொருளாதாரம், சமூகவியல் துறைகள் உட்பட இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உயர்த்துவதற்கான பல்வேறு முன்முயற்சி திட்டங்களை பலப்படுத்துவது மூலம் இந்திய சமூகத்தின் சமூகவியல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கடப்பாட்டை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு கொண்டு இருப்பதாக டத்தோ ஏரன் அகொ டாகாங் தெரிவித்தார்.
தவிர மலேசியாவில் அனைத்து இன மக்களிடையே நிலவி வரும் வறுமைக்கோட்டை துடைத்தொழிப்பதற்கும் மடானி பொருளாதார திட்டத்தில் அரசாங்கம் தொடர்ந்து கடப்பாட்டை கொண்டு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா மற்றும் மடானி பொருளாதார திட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் அரசாங்கம் கொண்டு வந்து இருப்பது குறித்து தாம் முழுமையாக வரவேற்பதாக அமைச்சர் டத்தோ ஏரன் அகொ டாகாங் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் இந்தியர்களின் மித்ரா மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஆகிய இரண்டு பிரிவுகளும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளன.