ஜன.5
2024 ஆம் ஆண்டிற்கான தை மாதத்தின் முதல் நாளான தைப்பொங்கல், வரும் ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு, இறைவனுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் அன்று, பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரத்தை மலேசிய இந்து சங்கம் அறிவித்துள்ளது.
பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம், ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரையாகும். அல்லது காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொங்கல் வைக்கலாம். மாலையில் பொங்கல் வைக்க விரும்புகின்றவர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொங்கல் வைக்கலாம். இருப்பினும் காலையில் பொங்கல் வைப்பதே சிறந்த உகந்த நேரமாகும்.
தைமாதம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.58 மணிக்கு பிறக்கிறது, எனவே தைப்பொங்கல் சூரிய வழிபாட்டிற்கு உகந்தது என்பதால் மறுநாள் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் திருநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூசன் தங்க. கணேசன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.