சுபாங் ஜெயா,ஜன.16
பூச்சோங், தாமான் பூச்சோங் ப்ரிமா 3 இல் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட 29 வயது ஆடவர், 13 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரைப்படத்தில் வருவதைப் போன்று நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஆறு குற்றப்பதிவுகளையும், இதர குற்றச்செயல்கள் தொடர்பில் 7 குற்றப்பதிவுகளையும் கொண்டுள்ளார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.49 மணியளவில் நடந்த போலீசாரின் அதிரடித் தாக்குதலில் அந்த நபர், சம்பவம் நடந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.அந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் போலீசார் நடத்திய பதிலடித் தாக்குதலில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் திரைப்படத்தில் வருவதைப் போல் நடந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை சில வாகனங்கள் துரத்திக்கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார். ஓர் இடத்தில் அந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியின் வாகனத்தை சூழ்ந்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 39 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை விவரிப்பதாக உள்ளது.