கடந்த வாரம் ஜெர்மனி பயணம் உட்பட வெளிநாடுகளுக்கு தாம் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உச்சிக்குளிரும், சொகுசுப் பயணங்கள் அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இப்பயணங்கள் யாவும் மலேசியாவின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்களே தவிர சில தரப்பினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் போல உல்லாசப் பயணங்கள் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.
விடுமுறைக்காக மகிழ்ச்சியில் திளைத்திருப்பதற்கு தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசாங்கப் பணத்தை விரயமாக்கி, தாம் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சில தரப்பினர் தவறாக விமர்சனம் செய்து வருவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
தாம் மட்டுமல்ல, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும், அரசாங்க விமானங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளில் குதூகலத்திற்காக சென்று வருவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவது இயல்பு. ஆனால், உண்மை அதுவல்ல.
கடந்த வாரம் ஜெர்மனிக்கு தாம் மேற்கொண்ட வருகையின் போது, தமது அலுவல்கள் யாவும், ஹோட்டலுக்கும், சந்திப்பிற்கான கூட்ட அறைகளுக்கு மட்டுமே இருந்ததே தவிர ஒரு கடைக்குகூட செல்லவில்லை என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறையினரின் வாராந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பி ரதமர் மேற்கண்டவாறு கூறினார்.