இந்தியா, ஏப்ரல் 19-
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த 33ஆவது ஐபிஎல் போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா 6500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 33ஆவது ஐபிஎல் 2024 போட்டி முல்லன்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி 192 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 28 ரன்கள் எடுத்திருந்த போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 6500 ரன்களை நிறைவு செய்தார். மேலும், ஐபிஎல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 6500 ரன்களை கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி 244 போட்டிகளில் 7624 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 361 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷிகர் தவான் 222 போட்டிகளில் விளையாடி 6769 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டெல்லி கேபிடல்ஸ் வீரர் டேவிட் வார்னர் 182 போட்டிகளில் விளையாடி 6563 ரன்களும் எடுத்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து 23ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், அதிரடி காட்டிய ஸ்கை 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 78 ரன்களில் நடையை கட்டினார்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.