கோல குபு பாரு, ஏப்ரல் 30-
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பரப்புரைகளை மேற்கொள்ள மறுத்துள்ள ம.சீ.ச கட்சியிக்கும் வேட்பாளரை நிறுத்தியுள்ள DAP கட்சிக்கும் இடையில் நீடிக்கும் கருத்துமோதல்கள் பெரிக்காதான் நசியனால் கூட்டணி வேட்பாளரான கைருல் அஸ்ஹரி சௌத்-ட்டிற்கு வெற்றி வாய்ப்பை அளிக்கலாம் எனஅகாடமி நுசாந்தரா அமைப்பைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஹாசன் தெரிவித்தார்.
வரக்கூடிய இடைத்தேர்தலிலும் தேசிய அளவிலும் ம.சீ.ச கட்சியால் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆகையால், அக்கட்சிக்கு பக்காத்தான் ஹாராப்பான் குறிப்பாக DAP அதிக முனைப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது என்றாரவர்.
இதற்கு முன்பு, கோல குபு பாரு இடைத்தேர்தலில் களமிறங்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் பாங் சாக் தாவோவுக்கு ம.சீ.ச கட்சி களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது என PKR கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் அடாம் அட்லி வலியுறுத்தியிருந்தார்.
அதற்கு பதிலடியை வழங்கிய ம.சீ.ச இளைஞர் பிரிவின் தகவல் பிரிவு தலைவர் நியோவ் சூ சியோங், ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள கட்சிகள், நேர்மையற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், தேர்தலுக்காக தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியிடமிருந்து உதவியைப் பெறுவதற்காக, ஒற்றுமை உணர்வை பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியினர் ஒரு காரணமாக முன்வைக்கக்கூடாது என சாடியிருந்தார்.