இந்தியா, ஜூன் 06-
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலமாக ஒரு கேப்டனாக ரோகித் சர்மா 42 வெற்றிகளை பெற்று தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
நியூயார்க்கில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேலும், ஷிவம் துபே, அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 7 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது முதல் முறையாக இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் மோதுகின்றன.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 2, ஆண்ட்ரூ பல்பிர்னி 5 என்று தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஒரே ஓவரில் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தனர். லோர்கன் டக்கர் 10 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழக்க, ஹாரி டெக்டர் 4 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக அயர்லாந்து 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார். ரோகித் சர்மா மட்டும் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் குவித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.
மேலும், இந்தப் போட்டியில் 37 ரன்கள் எடுத்ததன் மூலமாக டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அதோடு குறைவான பந்துகளில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.