ஈப்போ, ஜூன் 13-
தனது மனைவியை அடித்து, பலமுறை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக நபர் ஒருவர் வரும் ஜூன் 19 ஆம் தேதி வரையில் ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைப்பதற்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
56 வயது அந்த நபர் மாஜிஸ்திரேட் ஃபரா நபிஹா முஹம்மது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணையை மேற்கொள்வதற்காக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மாஜிஸ்திரேட் ஃபரா நபிஹா அறிவித்தார்.
நேற்று காலை 8 மணியளவில் ஈப்போ, கம்போங் சிமி, லாலுவான் சிமி 11 என்ற இடத்தில் தனது 48 வயது மனைவியை குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் பலமுறை கத்தியால் குத்துவதை அந்த தம்பதியரின் 12 வயது மகள் நேரில் பார்த்ததாக கூறப்பட்டிருந்தது.
முன்னதாக, அத்தம்பதியருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.