தவௌ, ஜூன் 13-
கடந்த மார்ச் 22 ஆம் தேதி, 17 வயது தொழிற்கல்லூரி மாணவனை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவ தொடர்பில், லஹாட் டத்து தொழிற்கல்லூரியில் பயிலும் 7 மாணவர்களை ஜாமீனில் விடுவிக்க விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த மனுவை தவௌ உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்த ஏழு மாணவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் டத்தோ ராம் சிங் சமர்பித்த ஜாமீன் விண்ணப்பத்தை விசாரித்து பரிசீலித்த நீதிபதி டத்தோ டங்கன் சிகோடோல் இத்தீர்ப்பை வழங்கினார்.
இவ்வழக்கு இன்னும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் இருப்பதாலும் குற்றச்சாட்டப்பட்டிருபவர்களை ஜாமீனில் விடுவிக்க சிறப்பு சூழ்நிலைகள் எதுவும் கொண்டிருக்காத காரணத்தினாலும் இந்த ஜாமீன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி டத்தோ டங்கன் கூறினார்.
மேலும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டால் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முழு சுதந்திரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, 16 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் கடந்த மார்ச் 21 ஆம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் மார்ச் 22 ஆம் தேதி காலை 7.38 மணி வரையில் Lahad Datu தொழிற்கல்லூரி, 7 ரெசாக் மற்றும் 5 பெலியன்-னில் உள்ள அறையில் 17 வயது பாதிக்கப்பட்ட மாணவனை கொடூரமாக அடித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.