கோலாலம்பூர், ஜூன் 25-
2024 ஆம் ஆண்டு நிர்வாக மேம்பாட்டுக்கான அனைத்துலக கழகத்தின் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டு தரவரிசையில் மலேசியா, 27 ஆவது இடத்திலிருந்து 34 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியுற்று இருப்பதைத் தொடர்ந்து தமது தலைமையிலான அரசாங்கத்தின் பலவீனங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த அனைத்துலக அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் கருத்தில் கொள்ளப்படும். வெளிப்படையிலான அணுகுமுறையின் வாயிலாக இந்த பலவீனங்கள் களையப்பட்டு, மேம்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
மலேசியா 7 இடங்கள் குறைந்து 34 ஆவது இடத்திற்கு தள்ளப்ப்டடதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, அது குறித்து பகிரங்கமாக விவாதிக்குமாறு அமைச்சரவைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக இன்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
IMD தர வரிசை என்பது ஒரு நாடு பொருளியில் ரீதியாக கொண்டுள்ள உலகளாவிய போட்டித்திறன் அடைவு நிலையை மதிப்பீடு செய்யும் ஓர் அளவுகோலாகும். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 27 ஆவது இடத்தில் இருந்த மலேசியா இம்முறை 34 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தரவரிசையில் மலேசியா வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து தமது தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா? என்று பெரிக்காத்தான் நேஷனலின் அலோர் ஸ்டார் எம்.பி. அஃப்னான் ஹமிமி தைப் அஜாமுதீன் எழுப்பிய கேள்விக்கு அன்வார் மெளனம் சாதித்தார்.
மலேசியாவின் இந்த வீழ்ச்சியினால் அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.