கோலாலம்பூர், ஜூன் 25-
இஸ்லாம் அல்லாத சிறார்களையும், பதின்ம வயதுடைய மாணவர்களையும் ரகசியமான முறையில் மதம் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை விளக்கும் காணொளி அம்பலமானதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களில் ஒருவரான ஃபிர்தௌஸ் வோங் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.
பொது மக்கள் மத்தியிலும் குழப்பதைத் ஏற்படுத்தி, சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படும் சமயப் போதகர் ஃபிர்தௌஸ் வோங்- கிற்கு எதிராக போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.
இதனை வழக்கறிஞர்கள் ராஜேஸ் நாகரராஜனும், சச்ப்ரீத்ராஜ் சிங்- கும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த சமயப் போதகர் குற்றவியல் சட்டம் 505, C பிரிவின் கீழ் விசாரணை செய்வதற்கு ஏதுவாக போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக அந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
18 வயதுக்கு கீழ்பட்ட சிறார்களை அவர்களின் பெற்றோர்களான தாயும், தந்தையும் இருவரும் சம்மதித்தால் மட்டுமே மதம் மாற்றம் செய்ய முடியும் என்று சட்டம் தெளிவாக கூறுகிறது.
இந்நிலையில் இஸ்லாம் மதத்தின் மீது உந்தப்படும் முஸ்லிம் அல்லாத சிறார்கள், அவர்கள் 18 வயது எட்டும் வரையில் மிக ரகசியமான முறையில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று கூறி, அதற்கான வழிமுறைகளை அண்மையில் சமயப் போதகர் ஃபிர்தௌஸ் வோங்- பகிரங்கமாக விளக்கியிருப்பது தொடர்பான காணொளி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைமையும், சமய நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மதம் மாறிய நபரான ஃபிர்தௌஸ் வோங்- கிற்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில அரசாங்க சார்பற்ற அமைப்புகள் போலீசில் புகார் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.