பெய்ஜிங், ஜூன் 26-
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) தரையிறங்கியிருந்த சீனாவின் விண்கலம் அங்கிருந்து மணல் துகள்களை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது விண்வெளி துறையில் மனித குல சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் கடல் அலையை சீராக வைத்திருப்பதிலும், பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும் நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நிலவு குறித்த ஆய்வுகளுக்கு விஞ்ஞானிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவு குறித்த ஆய்வுக்கான ஆர்வத்தை தூண்டியதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சந்திரயான் திட்டம் உலக நாடுகளின் கவனைத்தை நிலவு பக்கம் திருப்பியது. யாருமே இதுவரை இறங்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது. இதனையடுத்து நிலவு மீது ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின. ஆனால், இரண்டும் தோல்வியடைந்தது.
மறுபுறம் சீனா, நிலவு குறித்த மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருந்தது. அதாவது, நிலவின் மற்றொரு பகுதியில் விண்கலத்தை தரையிறக்கி, அங்கிருந்து மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த மிஷன் ஒட்டுமொத்தமாக 53 நாட்கள் நடந்திருக்கிறது. நிலவை பொறுத்தவரை சீனாவுக்கு இது 6வது பயணமாகும். 6வது பயணத்திலேயே இப்படியொரு சாதனையை சீனா படைத்திருப்பது சர்வதேச விண்வெளி உலகில் பேசுபொருளாகியுள்ளது. அதேபோல, சீனாவின் இந்த வெற்றி அமெரிக்காவை தூண்டிவிட்டிருக்கிறது.