SPM தேர்வில் 10 A க்கு மேல் பெற்ற அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
பூமிபுத்ரா மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோட்டா முறை பாதிக்கப்படாத அளவிற்கு இன பேதமின்றி மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
உயர்கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுவதில் நிலவிவரும் பதட்ட நிலையை குறைக்கும் நோக்கில் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பை அனைவருக்கும் வழங்குவதென அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
மெட்ரிகுலேஷன் உட்பட மலேசிய கல்வி முறையில் சேர்வதற்கு பூமிபுத்ரா மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விவாதத்திற்குரிய ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த முறையானது சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராகவும், முரணாகவும் இருப்பதாக சிலர் வாதிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர், மெட்ரிகுலேஷன் கல்வி முறையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் கேள்விக்குறியாகி விடும் கூறி வருகின்றனர்.
எனவே மெட்ரிகுலேஷன் கல்வி முறையில் ஒரு சமநிலையான அணுகுமுறையை கையாளுவதற்கும், அனைவரின் நலனும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் அமைச்சரவை இந்த முடிவு எடுத்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
எ.ஸ்.பி.ம் தேர்வில் 10 A க்கு மேல் பெற்ற அனைவருக்கும் இனம், பின்னணி பாராமல் இடம் வழங்கப்பட வேண்டும் என்று என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அனைத்த தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதனை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
எனினும் சூடான அரசியல் சூழலில் இது போன்ற விஷயங்கள், சில நேரங்களில் இன மற்றும் சமூக பதட்டங்களுக்கு வழிவகுக்கம் என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டார்.
எவ்வாறு இருப்பினும் பூமிபுத்ராக்களுக்கு சிறப்பு சலுகையை வழங்க வகை செய்யும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 153 ஆவது பிரிவை கருத்தில் கொண்டு, மெட்ரிகுலேஷன் கல்வி முறையில் பூமிபுத்ரா மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோட்டா முறை எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
இன்று காலையில் புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளர்களுடனான மாதாந்திர பேரணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டாவாறு கூறினார்.
இதன் தொடர்பில் ஒவ்வொரு ஆண்டும் மெட்ரிகுலேஷன் கல்வி இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் போது கல்வி அமைச்சு எதிர்நோக்கக்கூடிய பதட்டமான சூழலை இந்த முறை தணிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.