ஹுலு சிலாங்கூர், ஜூலை 1-
உலு சிலாங்கூரில் காரினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.50 மணியளவில் ஜாலான் கோலாலம்பூர் – ஈப்போ சாலையில் நிகழ்ந்தது. இதில் யமஹா லஜெண்டா 115Z மோட்டார் சைக்கிளோட்டியான 57 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.
ரவாங்கிலிருந்து உலு சிலாங்கூரை நோக்கி சென்று கொண்டிருந்த Perodua Bezza கார் ஓட்டுநரான 54 வயது நபர், எதிரே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதித் தள்ளியதாக அஹ்மத் பைசல் குறிப்பிட்டார்.
இதில் மற்றொரு நபரான 53 வயது ஹோண்டா மோட்டார் சைக்கிளோட்டி, கடும் காயங்களுக்கு ஆளாகி செலாயாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அஹ்மத் பைசல் தெரிவித்துள்ளார்.