உள்துறை அமைச்சரை கண்டித்தார் பிரதமர்

கோலாலம்பூர், ஜுலை 2-

மக்களளைவில் இன்று செவ்வாய்க்கிழமை Batik சட்டையை அணிந்து வந்த உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயிலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஆஜராகும் போது ஆடை கோட்பாடு தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுமாறு சைபுடினுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

மக்களவையில் பாத்தேக் சட்டையை அணிந்திருப்பது குறித்து சைபுடினை நோக்கி கேள்வி எழுப்பிய உலு திரெங்கானு பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. டத்தோ ரோசோல் வாஹிட்டின் வாதத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக தமது கேள்வியை முன்வைப்பதற்கு முன்பு, உள்துறை அமைச்சர் சைபுடின் அணிந்திருந்த பாத்தேக் ஆடை குறித்து அந்த பாஸ் கட்சி எம்.பி. கேள்வி எழுப்பினார்

நாடாளுமன்றத்தில் எந்த கிழமையில் பாத்தேக் ஆடையை அணிய வேண்டும் என்ற தமது கேள்விக்கு உள்துறை அமைச்சர் சைபுடின் முதலில் பதில் அளிக்க வேண்டும். காரணம், இன்று செவ்வாய்க்கிழமை பாத்தேக் ஆடையை அணியும் தினமா? என்று அந்த எம்.பி. வினவினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நாடாளுமன்றக்கூட்டத் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் வாரத்தில் வியாழக்கிழமை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாத்தேக் ஆடையை அணிய அனுமதிக்கப்படுவர்.

WATCH OUR LATEST NEWS