மெர்ஸ்999 அவசர அழைப்பு பதிலாக என்.ஜி999 – தியோ

கோலாலம்பூர், ஜூலை 2-

நாட்டின் புதிய அவசர அழைப்பு அமைப்பாக அடுத்த தலைமுறை அவசர சேவைகள் NG999, மலேசிய அவசரநிலை பதில்கள் மெர்ஸ்999 ( MERS999) க்கு பதிலாக அறிமுகம் கண்டுள்ளது.

இலக்கவியல் அமைப்பான என்.ஜி999, அவசர அழைப்பு மையங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு மத்தியில் தரவுகள் பகிர்வதை அதிகரிக்கும். இதன் வழி, அவசரகால சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த இது உதவும் என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

இதன் ஒப்பந்தம் 12 ஆண்டுகள் ஆகும். இதன் வளர்ச்சிக்கு ஒரு வருடம் மற்றும் சேவையை நிர்வகிப்பதற்கு 11 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவசர உதவியை மிகவும் திறம்பட வழங்க தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் என்.ஜி999 பயன்படுத்துகிறது.

இந்த புதிய அவசர அழைப்பு முறையானது, அடுத்த ஆண்டு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கோலாலம்பூரில் தொடர்பு அமைச்சு மற்றும் டெலிகாம் மலேசியா TM இடையே நடைபெற்ற என்.ஜி999 புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இந்த புதிய அமைப்பு இணைய அடிப்படையிலான இலக்கவியல் வரைபடங்கள், அழைப்பாளர் விபரங்கள், புவிஇருப்பிடச் சேவைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் ஸ்மார்ட் மொபைல் பயன்பாடுகள் ஆகியவற்றைக் கையாள்வதில் ஒருங்கிணைப்பதாக தியோ தெரிவித்தார்.

என்.ஜி999 அமைப்பு நாடு முழுவதும் 800 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இது தற்போதுள்ள மெர்ஸ்999 இருக்கும் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதற்கிடையில், கடந்த மாத நிலவரப்படி, மெர்ஸ்999 ஒவ்வொரு மாதமும் சுமார் 15,000 முதல் 16,000 போலி அழைப்புகளைப் பெற்றுள்ளதாக தியோ தெரிவித்தார்.

உண்மையில் போலி அழைப்புகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது குறைந்துள்ளது, இதில் அழைப்புகள் 31,000 ஆக இருந்தது, கடந்த ஆண்டு அது ஒரு மாதத்திற்கு 19,000 அழைப்புகளாக குறைந்துள்ளது என்றார் தியோ

WATCH OUR LATEST NEWS