கூலிம், ஜூலை 8-
எலி மருந்தை கலந்து இருக்கலாம் என்று நம்பப்படும் Keropok நொறுக்குத்தீனியை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள், மிக ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகின்றன.
கெடா, கூலிம், லாபு பெசார், கம்புங் படாங் உபியில் வீட்டுக்கு அருகில், அண்டை வீட்டுக்காரருக்கு சொந்தமான தோட்டத்து கொல்லையில் வேலியோரத்தில் பொட்டலத்தில் கட்டப்பட்டு இருந்த அந்த நொறுக்குத்தீனியை உண்ட 2 மற்றும் 3 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகள், பினாங்கு மரத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மிக கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 11 மணியளவில் தனது இரண்டு குழந்தைகள், வாந்தி எடுத்தவாறு வாயில் நுரைத் தள்ளியவாறு சோர்வுற்று கிடப்பதைக் கண்ட 25 வயது மாது, அக்குழந்தைகளை அருகில் உள்ள Malau சுகாதார கிளினிக்கிற்கு அவசர அவசரமாக தூக்கிச் சென்றுள்ளார்.
பின்னர் அக்குழந்தைகள், கூலிம் மருத்துவனைக்கு இடம் மாற்றப்பட்டனர். எனினும் அக்குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முகமது அஜிசுல் முகமது கைரிதெரிவித்தார்.
அந்த குழந்தைகளின் வீட்டிற்கு அருகில் உள்ள
ஒரு தோட்டத்தில் குரங்குகளைப் பிடிப்பத்தற்காக அண்டை வீட்டுக்காரர் , எலி நச்சு மருந்தைக் கலந்த அந்த அந்த Kerppok நொறுக்குத்தீனி பொட்டலத்தை இரும்பு வேலியில் கட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நேற்று காலையில் அவ்விரு குழந்தைகளும் இரும்பு வேலியில் கட்டுப்பட்டு இருந்த ” SUPER RING “எனும் keropok பொட்டலத்தைத் திறந்து அதனை உட்கொண்டதாக நம்பப்படுகிறது.
இவ்விரு குழந்தைகளுக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வேளையில் இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 284 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அந்த நச்சு Keropok பெட்டாலம் கட்டப்பட்டு இருந்த தோட்டத்து கொல்லையின் உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக முகமது அஜிசுல் குறிப்பிட்டார்.