ஈப்போ, ஜூலை 8-
ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறையை நிராகரிக்கும்படி இந்நாட்டிலுள்ள அரசு சாரா இயக்கங்களான NGO மற்றும் இளைஞர் அமைப்புகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நபிகள் நாயகம் அவர்கள் வலுவான சமய நம்பிக்கை, மற்றும் உயர் நெறிகள் மூலம் ஊழல் மற்றும் அடக்குமுறையை சமூகத்திலிருந்து ஒழித்து நீதியை நிலை நாட்டியதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் இத்தகைய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் ஹிஜ்ராவின் உண்மையான பொருளை உணர்ந்தவர்களாகவும் தங்கள் கௌரவத்தை உயர்த்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்பவர்களாகவும் இருந்தால் நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஹிஜ்ரா என்பது காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள், அநீதியான, அடக்குமுறை மற்றும் அவதூறான செயல்களைத் துடைத்தொழிப்பதைக் குறிக்கிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே நாம் மாற முடியும். நாட்டையும் மக்களையும் காப்பாற்றக் கூடிய இந்த உணர்வுகளை லிமா ஜெனெரசி மலேசியா என்ற BLG அமைப்பு கொண்டிருக்கும் என தாம் நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு ஈப்போவில் நடைபெற்ற BLG அமைப்பின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.