நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 08-

டிக் டாக் சமூக ஊடகத்தில் பகடிவதையினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஈஷா என்ற ராஜேஸ்வரி என்பவரின் மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று Dinamik Sinar Kasih Malaysia இயக்கத்தின் தலைவர் டத்தோ N. சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

டிக் டாக்கில் போலி கணக்கை பயன்படுத்தி மற்றவர்களுக்கு எதிராக அவதூறு விளைவித்து, அவமானப்படுத்தி, அச்சறுத்தலை ஏற்படுத்தி வரும் நபர்களை தண்டிப்பதற்கும், மற்றவர்களுக்கு ஒரு பாடாமாக அமையவும் ஈஷா மரணம் தொடர்பில் நீதி விசாரணை அவசியமாகும் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

அதேவேளையில் ஈஷா மரணம் தொடர்பில் அவருக்கு அவதூறு விளைவித்ததாக கூறப்படும் ஒரு நபரை மிக துரிதமாக கைது செய்து இருக்கும் செந்தூல் மாவட்ட போலீசாருக்கு தனது நன்றியை சிவகுமார் தெரிவித்துக்கொண்டார்.

இணைய பகடிவதைகளைக் கையாளுகின்ற குற்றவாளிகள் பெரும்பாலும் போலி கணக்குகளை கொண்டிருக்கின்றனர். குறிப்பாக டிக் டாக்கில் மற்றவர்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதற்கு போலி கணக்கு ஒரு கேடயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யாரை, எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம் என்பதற்கு பலர் டிக் டாக்கில் போலி கணக்கை முகமூடியாக அணிந்துக்கொண்டு இத்தகைய பாதக செயல்களை புரிந்து வருகின்றனர்.

மலேசிய டிக் சமூக ஊடகத்தில் போலி கணக்கு பயன்படுத்துவதற்கு தொடர்ந்து அனுமதித்தால் பல்வேறு விபரீதங்களும் ஆபத்துகளும் தொடர்ந்து ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கின்றன. .

எனவே சமூக ஊடகத்தில் பிரபலமாக விளங்கிய ஈஷாவிற்கு ஏற்பட்ட கதியைப் போல் மற்றவர்களுக்கு நேராமல் முன்கூட்டிய தடுப்பதற்கு போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவது குறித்து தொடர்புத்துறை அமைச்சர் பாமி பட்சில் – லும், மலேசிய பல்லூடக ஆணையமும், போலீஸ் துறையும் ஆராய வேண்டும் என்ற டத்தோ சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS