தைப்பிங், ஜூலை 08-
இணையத் வலைத்தளங்களில் நிகழும் மோசடிகளைத் தடுப்பதற்காக புதிய சட்டத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு 2010 ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 709 இல் செய்யப்படவிருக்கும் திருத்தம் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என இலக்கவியல் அமைச்சு உறுதியளித்துள்ளது.
இவ்விரு சட்டங்களும் நுட்ப மற்றும் சட்ட அமலாக்க கோணங்களில் முற்றிலும் மாறுபட்டவை என்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
சட்டப் பிரிவு 709 இல் செய்யப்படவிருக்கும் திருத்தமானது, தனிநபர் தரவுகள் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தரவு மீறல் அல்லது ஊடுருவல் நிகழ்ந்தால் அது குறித்த முன்னறிவிப்பை சம்பந்தப்பட்ட பங்களிப்பாளர்கள் கட்டாயமாக வழங்குவதை உறுதி செய்வதற்கான சட்ட விதிகளை அரசாங்கம் உருவாக்க வேண்டியுள்ளது என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.