கோலாலம்பூர், ஜூலை 09-
டிக் டோக் பகடிவதையினால் தற்கொலைக்கு இட்டுச் சென்ற ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் அவருக்கு நீதி கிடைக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் மிக உருக்கமான கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
துணிச்சல், தன்னம்பிக்கை, பேச்சுத் திறன், பிறரை மதிக்கும் பண்பு முதலிய குணாதசியங்களை ஒருங்கே பெற்றவரான தமது செல்லத் தங்கையின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் குடும்ப உறுப்பினர்கள் பரிதவித்து வருகின்றனர் என்று ஈஷாவின் மூத்த சகோதரியான 34 வயது A. சுசிலா தெரிவித்தார்.
பிறருக்கு தைரியம் சொல்லும் அளவிற்கு தன்னம்பிக்கை பறவையாக விளங்கிய தமது தங்கையின் சிறகை உடைத்து, உயிரற்ற உடலாக தங்கள் குடும்பத்தினருக்கு தந்து பெறும் துயரத்தை ஏற்படுத்திய இணையத்தள பகடிவதை நயவஞ்சகர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டால் மட்டுமே அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தியடையும் என்று சுசிலா தெரிவித்தார்.
மிகுந்த சமயப்பற்று மிக்கப் பெண்ணாக விளங்கிய ஈஷா, உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஈவிறக்கமற்ற முறையில் அருவரக்கத்தக்க ஆபாசப் பேச்சுக்களையும், படங்களையும் பதிவிறக்கம் செய்த அந்த ந்யவஞ்சகர்களை தண்டிக்கும் பொறுப்பு போலீஸ் துறையிடமும் சட்டத்துறையிடமும் விட்டு விடுவதாக சுசிலா குறிபிட்டார்.
டிக் டோக் பகடிவதைக்கு ஆளாகிய 30 வயது ஈஷா என்ற ராஜேஸ்வரி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
கோலாலம்பூர்,தாமான் மெலாதி, கோம்பக் செத்ய , P.P.R. குடியிருப்பைச் சேர்ந்த் ஈஷா மரணம் தொடர்பில், அவரை பகடிவதை செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக நம்பப்படும் ரவாங், ஜாலான் புக்கிட்கோல்ப் ரேசொர்ட் – ஐ சேர்ந்த 35 வயது இந்தியப் பெண்ணை போலீசார் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கைது செய்துள்ளனர்.
மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த 35 வயதுப் பெண்ணுடன் இந்த பகடிவதையில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.