கிள்ளான்,ஜூலை 13-
NKVE புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின் 3.1-ஆவது கிலோமீட்டரில் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை கார் ஒன்று மோதித்தள்ளியது.
இன்று அதிகாலை நேர்ந்த அவ்விபத்தில் மூன்று இந்திய நாட்டவர்கள் உயிரிழந்தனர்.
வங்காளதேச தொழிலாளர் ஒருவர் சிராய்ப்புக் காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
சம்பவம் குறித்து இன்று அதிகாலை 3:30 மணிக்கு அவசர அழைப்பை பெற்றதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
டாமன்சராவில் இருந்து கிள்ளானை நோக்கி புரோட்டான் வாஜா ரகக் கார் பயணித்துக் கொண்டிருக்கையில் கட்டுப்பாட்டை இழந்து, பராமரிப்பு பணிகளுக்காக போடப்பட்டிருந்த தடுப்புகளையும், சாலை தடுப்பையும் சரமாரியாக மோதியது.
அப்போது அங்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த குத்தகையாளர் உட்பட 24 முதல் 29 வயதுடைய மூன்று இந்தியர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
சவப்பரிசோதனைக்காக அவர்களின் உடல் ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கார் ஓட்டுநர் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில், அவர் மதுபானமும், போதைப் பொருளும் உட்கொண்டிருந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக உதவி கமிஷனர் முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.