இணையப் பகடிவதைப் புரிந்த ஷாலினி-க்கு 100 வெள்ளி அபராதம்; நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஈஷா-வின் தாயார் கடும் அதிருப்தி

கோலாலம்பூர், ஜூலை 17-

TIKTOK-க்கில் ஈஷா என்ற பெயரில் பிரபலமாக இருந்துவந்த 29 வயது A. ராஜேஸ்வரி எனும் பெண், இணையப் பகடிவதையால் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம்.

அவரிடம் இணைய பகடிவதை புரிந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட முதியவர் பராமரிப்பு இல்லத்தின் உதவியாளரான 35 வயது ஷாலினி பெரியசாமி எனும் பெண்ணுக்கு, கோலாலம்பூர் மேஜிஸ்ட்ரெட் நீதிமன்றம் நேற்று 100 வெள்ளி அபராதத்தை மட்டுமே விதித்துள்ளது குறித்து, உயிரிழந்த பெண்ணின் தாயார் PR புஸ்பா கடும் அதிருப்தியை தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தமக்கு வியப்பளிப்பதாகவும் தம்மால் அதனை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

இன்று இணையப் பகடிவதையால், தனது மகளுக்கு ஏற்பட்ட விபரீதம், நாளை வெறொருவரது மகளுக்கும் நிகழலாம் எனவும் கடவுளுக்குத்தான் அது தெரியும் என்றும் புஸ்பா வேதனையுடன் குறிப்பிட்டார்.

புஸ்பா -வைப் போன்றே, சமூக ஊடகவாசிகளும், ஷாலினி-க்கு விதிக்கப்பட்ட 100 வெள்ளி அபராதம் குறித்து நேற்றிலிருந்து அவர்களது கடும் அதிருப்திகளை பதிவு செய்துவருகின்றனர்.

இவ்வேளையில், ஷாலினி-க்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து, அனைவரது பார்வையும், தற்போது ஈஷா வுக்கு மருட்டல் விடுத்திருந்த மற்றொரு நபரான 44 வயது B சதீஸ்குமார் எனும் ஆடவரின் பக்கம் திரும்பியுள்ளது.

நேற்று SESYEN நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், TIKTOK-க்கில் DULAL BROTHERS எனும் கணக்கில் ஈஷா-உக்கு எதிராக ஆபாசம் மற்றும் தகாத வார்த்தைகளை உபயோகித்ததாக முன்வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

அதேவேளையில், ஈஷா-வின் தாயாரை இழிவுபடுத்தி பேசியதாக முன்வைக்கப்பட்ட இரண்டாம் குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணைக் கோரினார்.

அவ்விரு குற்றச்சாட்டுகளை உட்படுத்தி, அவ்வாடவருக்கு 36 ஆயிரம் வெள்ளி பிணையை வழங்கிய நீதிபதி சித்தி அமினா கசாலி, அவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS