கோலாலம்பூர், ஜூலை 17-
கோலாலம்பூர் மாநகரில் அந்நிய நாட்டவர்களும், சிறார்களும் பிச்சையெடுக்கும் நடவடிக்கைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று கூறி குடிநுழைவுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவரை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
கடந்த ஜுன் 25 ஆம் தேதியிலிருந்து 22 நாட்களுக்கு Bukit Jalil தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மாலிக் அபித் உசேன் என்ற அந்த பாகிஸ்தான் ஆடவர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு HABEAS CORPUS எனும் ஆட்கொணர் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
அந்த பாகிஸ்தான் பிரஜையின் மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி அசார் அப்துல் ஹமீத், அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு இருந்த போது, வழக்கறிஞரை நியமித்துக்கொள்வதற்கு அவருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை நிலைநாட்டப்படவில்லை என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இதன் மூலம் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 5 ஆவது விதியை குடிநுழைவுத்துறை மீறி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.