கோலாலம்பூர், ஜூலை 17-
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும், அதிகமான புத்தகங்கள் அவர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் புத்தக வங்கித் திட்டம் ஒன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் யாழ் இயக்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மலேசிய தேசிய நூலகத்தின் வாயிலாக தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள தேசிய நூலகமான Perpustakaan Negara Malaysia, Menara PNB-யில் இன்று பிற்பகலில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கான புத்தக வங்கித் திட்டத்தை, தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்திய சமுதாயத்தில் வாசிக்கும் பழக்கத்தின் வாயிலாக சிறந்த தலைமுறையையும், சான்றோர்களையும் உருவாக்கம் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக துணை அமச்சர் சரஸ்வதி தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்த புத்தக வங்கித் திட்டமானது, மக்கள் தாங்கள் படித்த புத்தகங்களை தேசிய நூலுகத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதும், பெறுவதும் மட்டும் அல்ல.
மாறாக, இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற புத்தகங்கள் தமிழ்ப்பள்ளிகளை சென்றடைய வேண்டும். அதன் வாயிலாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களை சான்றோர்களாக உருவாக வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தையும் கொண்டுள்ளது என்று சரஸ்வதி குறிப்பிட்டார்.
மக்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களை வீட்டின் அலமாரியில் அலங்காரப் பொருட்களாக வைத்திருப்பதை காட்டியிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக அவற்றை புத்தக வங்கிக்கு அன்பளிப்பாக வழங்கலாம்.
இதற்காக தேசிய நூலகத்தின் புத்தக வங்கி, வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆம் தேதி வரை திறக்கப்பட்டு இருக்கும் என்பதையும் சரஸ்வதி விளக்கினார்.
முதல் கட்டமாக திருமதி சரோஜினி ரூத் தலைமையிலான DAWM ( டாவ்ன் ) அமைப்பு வழங்கிய 14 பெட்டி புத்தகங்கள் கெடா மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சரஸ்வதி, இந்த புத்தக வங்கித் திட்டத்திற்கு இந்திய சமுதாயம் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விவரித்தார்.

கெடா மாநிலத்திற்கு அப்பாற்பட்டு இன்று மேலும் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு இருப்பதையும் சரஸ்வதி விளக்கினார்..
இந்நிகழ்வில் மலேசிய தேசிய நூலகத்தின் இயக்குநர் சலாசியா அப்துல் வஹாப் , தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப், தமிழ் மலர் நாளிதழின் நிர்வாக இயக்குநர் டத்தோ SM பெரியசாமி, மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் S.S. பாண்டியன் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் யாழ் இயக்கத்தின் தலைவர் பொன். கோகிலம், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
