மனைவியை அடித்த கணவரை நீதிமன்றம் விடுவித்தது

கோலாலம்பூர், ஜூலை 18-

தனது மனைவியை மோப்புக்கட்டை மற்றும் Besbol மட்டையினால் அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த ஆடவர் ஒருவரை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யாமல், வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

இந்திரஜித் சிங் என்ற 45 வயதுடைய அந்த ஆடவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சில திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் முஹம்மது முஹைரி முகமது நோ, நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து தண்டனை அளிக்கப்படவிருந்த நிலையில் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் ,ஜாலான் ஈபோ, தமன் ரெயின்போ, செந்தூல் என்ற முகவரியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் தனது மனைவி சுக்விந்தர் கௌர் என்பவரை அடித்து காயத்தை விளைவித்தாக இந்திரஜித் சிங் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் இந்திரஜித் சிங் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS