கோலாலம்பூர், ஜூலை 18-
சுமார் 90 லட்சம் வெள்ளி மதிப்புள்ள Cocaine
போதைப்பொருளை பதப்படுத்தி, விநியோகம் செய்ததாக நம்பப்படும் கணவன் மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூர் செராஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த மூவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கடத்தியதாக நம்பப்படும் 90 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.
மலேசிய போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவு மற்றும் அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ காவ் கோக் சின் இவ்விவரத்தை வெளியிட்டார்.
இரவு 10 மணியளவில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் மேற்கொள்ளப்பபட்ட சோனையில் பிடிபட்ட 41 வயதுடைய கணவனும், மனைவியும் பிடிபட்டனர்.
இதில் கணவன் போதைப்பொருள் விநியோகிப்பாளராகவும், மனைவி போதைப்பொருள் கிடங்கை பராமரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.