ஷாலினி பெரிசாமிக்கு 100 வெள்ளி அபராதம் விதிப்பு / ஆருட விவாதங்கள் வேண்டாம்

கோலாலம்பூர், ஜூலை 18-

பொது மக்களுக்கு போலீஸ் துறை எச்சரிக்கை

இணைய பகடிவதைக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொண்ட சமூக ஊடக பிரபலம் A. .ராஜேஸ்வரி என்ற ஈஷா- மரணம் தொடர்பில் பிடிபட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த 100 வெள்ளி அபராதம் குறித்து ஆருட விவாதங்கள் வேண்டாம் என்று பொது மக்களுக்கு போலீஸ் துறை எச்சரித்துள்ளது. .

இச்சம்பவம் தொடர்பில் விசாரணையின் போது கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே சமூக இல்ல பராமரிப்பாளரான அந்தப் பெண்ணுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.

1955 ஆம் ஆண்டு சிறு குற்றவியல் சட்டம் 14 ஆவது விதியின் கீழ் அந்தப் பெண் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அச்சட்டத்தின் கீழ் கூடிய பட்ச தண்டனை என்பது 100 வெள்ளியாகும் என்று டத்தோ ருஸ்டி விளக்கினார்.

சம்பந்தப்பட்ட பெண், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கூடிய பட்ச தண்டனையாக 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ருஸ்டி இதனை தெரிவித்தார்.

30 வயது ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவரை பகடிவதை செய்ததாக நம்பப்படும் ரவாங், புக்கிட் பெரிந்துங் கோல்ஃப் ரிசார்ட், ஜாலான் செம்பகா 2- ஐ சேர்ந்த 35 வயது பெண் ஷாலினி பெரியசாமிக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை 100 வெள்ளி அபாரதம் விதித்தது.

ஷாலினி பெரியசாமிக்கு மிக குறைந்த அபராதத் தொகையாக வெறும் 100 வெள்ளி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடக வலைவாசிகள் பல்வேறு ஆருட விவாதங்களில் ஈடுபட்டு வருவது தொடர்பில் டத்தோ ருஸ்டி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் புகார்கள் பெற்று, புதிய ஆதாரங்கள் கிடைக்குமானால் அவை குறித்து புலன் விசாரணை செய்வதற்கு போலீஸ் துறை தயாராக இருப்பதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS