கோலாலம்பூர், ஜூலை 18-
சமூக வளைத்தளங்களில் பகடிவதை சம்பவங்களை ஒரு கடுமையான குற்றமாக பார்க்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப பகடிவதைகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை உள்துறை அமைச்சு முன்வைத்துள்ளது.
இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், பகடிவதையினால் உயிரை மாய்த்துக்கொண்ட டிக் டாக் பிரபலம் ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் இணைய மிரட்டலையும், பகடிவதையும் ஏற்படுத்திய ஷாலினி பெரியசாமிக்கு தண்டனையாக 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதை மேற்கோள்காட்டி பேசினார்.
சைபர் மிரட்டல் என்று கூறப்படும் இணைய பகடிவதை தொடர்பில் கடும் தண்டனைகள் விதிக்கப்படுவது தொடர்பான பரிந்துரை ஒன்றை உள்துறை அமைச்சு வெகுவிரைவில் அறிவிக்கும் என்று அமைச்சர் சைபுடின் குறிப்பிட்டார்.
அதேவேளையில் நடப்பு சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அவற்றை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.