ஜூலை 19-
வெள்ளிக்கிழமை சுக்கிர வார தினத்தில் வரும் பிரதோஷ நாளில் சிவன் நந்தியை தரிசனம் செய்தால் கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.
சௌபாக்கியம் தரும் பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.
பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தி கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.
தியானம் செய்யும் நேரம்:
நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையில், ஈஸ்வர பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க இதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
நந்தியின் காதில் வேண்டுதல்:
சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பது தான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலன் நந்தியிடம் உங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்தி பெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு
