பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19-
இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே பெட்ரோலுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டம், எப்போது அமல்ப்படுத்தப்பட்டாலும், பொருள்களின் விலையை, அது உயர்த்தவே செய்யும் என மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் – FOMCA-வின் தலைமை நிர்வாக அதிகாரி T.சரவணன் தெரிவித்தார்.
அண்மையக் காலமாக, பெட்ரோல் உதவித்தொகை குறித்து பரவலாக பேசப்பட்டு வருவதால், அத்திட்டம் கண்டிப்பாக அமலாக்கம் காணும் என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
அரசாங்கம் அதனை சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ அமல்படுத்தினாலும், வர்த்தக நடவடிக்கைகளில், அது கூடுதல் செலவுகளையே ஏற்படுத்தும். அதனால், பொருள்களின் விலைகள் உயர்வு கண்டு, இறுதியில், பயனீட்டாளர்களே அதனை சுமக்க வேண்டிவரும் என சரவணன் கூறினார்.
பெட்ரோலுக்கான உதவித்தொகை மறுசீரமைப்பு திட்டத்தின் அமலாக்கம் குறித்து அரசாங்கம் பயனீட்டாளர்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்துவது அவசியம்.
கால அவகாசம் வழங்கப்பட்டால், பயனீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் செலவிடும் முறையை திட்டமிடுவதோடு, விலை உயர்வின் தாக்கத்தையும் எதிர்கொள்ள வழிவகுக்கும் என சரவணன் குறிப்பிட்டார்.
இதனிடையே, பொருள்களின் விலைகள் அளவுக்கதிகமாக உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டால், பயனீட்டாளர்கள், அது குறித்து உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினம் மீதான அமைச்சிடம் முறையிட வேண்டும்.
கொள்ளை இலாபம் ஈட்டும் வணிகர்களுக்கு எதிராக அவ்வமைச்சு, உரிய விசாரணையை மேற்கொண்டு, நடவடிக்கையை எடுக்கும் என சரவணன் ஆலோசனை விடுத்தார்.