ஜூலை 20-
நாட்டின் 17 ஆவது மாமன்னராக அரியணை அமர்ந்த மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நேர்மையாகவும், நியாயமாகவும், சமத்துவமான முறையில் அனைத்து மக்கள் நலனை முழுமையாக கருத்தில் கொண்டு, நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.
நாட்டின் நலனையும், இறையாண்மையையும் பாதுகாப்பது தமது தலையாய கடமையாகும். தம் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்து, நாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்பதற்கு வாய்ப்பு வழங்கிய மலாய் ஆட்சியாளர்களுக்கு முதலில் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது உரையில் குறிப்பிட்டார்.
தமது ஆட்சிக்காலத்தில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கவும், நாட்டை மேலும் முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச்செல்லவும், ஒரு வளமான மற்றும் செழிப்பான நாடாக மலேசியாவை உருவாக்குவதற்கு தொடர்ந்து பாடுபடப் போவதாக தமது சத்தியப் பிரமான உரையில் சுல்தான் இப்ராஹிம் உறுதிமொழி தெரிவித்தார்.