ஜோகூர்,ஜூலை 20-
இன்று காலையில் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற கோலாகலமான அரச பாரம்பரிய முறையிலான வைபவத்தில் நாட்டின் 17 ஆவது மாமன்னர் மாட்சிமைத் தங்கிய சுல்தான் இப்ராஹிம், Yang di Pertuan Agong- ஆக முடிசூடி, அரியணை அமர்ந்தார்.
இஸ்தானா நெகாராவில் மலேசிய ஆயுதப்படையின் மூன்று பிரிவுகளின் இராணுவ பாரம்பரியத்தில் இரண்டறக் கலந்த அரச மரியாதையுடன் முடிசூட்டு விழா, காலை 9.45 மணிக்கு தொடங்கியது.
இஸ்தானா நெகாராவின் பிரதான சதுக்கத்தில் நாட்டின் பாதுகாப்பு படைகள், மாமன்னருக்கு உச்ச தளபதியாக விசுவாசமாக இருப்பதற்கான தங்களிள் உறுதிமொழி அடையாளத்துடன் விழா களைகட்டியது.
ஜோகூர் மாநில சுல்தானான பேரரசர் Sultan Ibrahim மற்றும் பேரரசியார் Raja Zarith Sofiah ஆகியோருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிசா வான் இஸ்மாயில் புடைசூழ வந்தனர்.
இஸ்தானா நெகாராவின் பிரதான சிம்மாசன அறையான Balai Rung Seri- யில் உள்ள ஏழு அடுக்கு மேடை நடைபெற்ற இந்த முடிசூட்டு விழாவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியாவின் 17 ஆவது மாமன்னராக முடிசூடிக்கொள்வதாக சத்தியப்பிரமாணத்தை வாசித்தவுடன் Nobat Diraja Perak- கை சேர்ந்த நோபாட் இசைக்குழுவினர் Raja Pertabalan எனும் இசையை இசைத்தனர்.
Maharaja Lela தலைமையில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் மண்டபத்தில் குழுமியிருந்த அனைவரும் Daulat Tuanku என முன்முறை உரக்க கூறினர்.
அத்துடன் முடிசூட்டு விழா ஒரு நிறைவுக்கு வருகிறது என்பதை குறிக்கும் வகையல் இஸ்தானா நெகாராவிற்கு வெளியே 21 மரியாதை குண்டுகள் வெடிக்கப்பட்டன.
முன்னதாக, நாட்டின் தேசியக் கீதமான நெகாராகூ இசைக்கப்பட்டப்பின்னர் Datuk Paduka maharaja Lela தம்மிடம் வழங்கிய அதிகாரத்தையும், சக்தியையும் குறிக்கும் தங்க முலாம் பூசப்பட்ட நீண்ட வாளான Keris Panjang Di Raja-வை கையில் ஏந்தியப் பின்னர் மாமன்னர் சத்தியப்பிரமானப் பத்திரத்தை வாசித்தார்.
மாமன்னர் Baju Muskat என அழைக்கப்படும் வைபவத்தில் அணியக்கூடிய கறுப்பு நிற உடையை முதல் முறையாக அணிந்திருந்தார். அதற்கு ஏற்றவாறு Dendan Tak Sudah கறுப்பு நிற கீரிடத்தையும் அணிந்திருந்தது, முடிசூட்டு விழாவின் கீர்த்தி வாய்ந்த தன்மையை உணர்த்தியது.
பேரரசியாரும் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தார். மாநில சுல்தான்கள், ஆளுநர்கள் தங்களின் மாநில உடைகளில் வருகை புரிந்தனர்.
மாமன்னர் சத்தியப் பிரமாணம் வாசிக்கப்படுவதற்கு முன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பிரகடனத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியாவின் உச்ச தலைவராக இன்றைய தினம் முடிசூட்டப்படுவதை மலேசிய மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பதாக அறிவித்தார்.
அப்போது சிம்மாசான அறையில் எக்காள முழக்கம் இசைக்கப்பட்டது.
நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய பொன்னாளான மாமன்னரின் முடிசூட்டுவிழாவில் மக்களும் பங்கு கொள்ளும் வகையில் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்வில் மாநில சுல்தான்கள், ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்களுடன் புருணை சுல்தான், Sultan Hassanal Bolkia, அவரின் துணைவியார் Hajah Saleha, Bahrain மன்னர் Sheik Hamad bin Isa Al Khalifa, சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான Lee Hsien Loong, அவரின் துணைவியார் Ho Ching உட்பட அழைக்கப்ப்டட வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.