பாரிஸ் , ஆகஸ்ட் 13-
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற அந்த தருணம், வீரர்கள் பெருமகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாடினர்.
ஆனால் பிஆர் ஸ்ரீஜேஷ் மட்டும் அமைதியாக அந்த இடத்தை விட்டு நடந்து சென்று, மைதானத்தின் ஒரு முனையில் இருந்த கோல் போஸ்ட்டின் முன் தலைகுனிந்து நின்றார். அந்த காட்சி அவருக்கும் கோல் போஸ்டுக்குமான நீண்ட நெடிய ஆழ்ந்த உறவை பிரதிபலித்தது. ஆம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக கோல்போஸ்ட் தான் அவரின் உறைவிடமாக இருந்தது.
ஆனால் அந்த வீட்டில் இனி இருக்க முடியாது. கோல் போஸ்டை அவர் எந்த அளவுக்கு `மிஸ்’ செய்கிறாரோ அதை விட இருமடங்காக இந்தியா அவரை `மிஸ்’ செய்யும். வியாழன் அன்று தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய `கோல்கீப்பர்’ ஸ்ரீஜேஷ், ஒரு புகழ் பெற்ற பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.
“இந்தியாவின் சுவர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஸ்ரீஜேஷ், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவரது அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்த ஸ்கோரை சமன் செய்ய ஸ்பெயின் கடுமையாக போராடியது. ஆனால் ஸ்ரீஜேஷ் அவர்களின் முயற்சிகளை முறியடித்தார், குறிப்பாக போட்டியின் இறுதி நிமிடங்களில் கோல்கீப்பராக கோல்போஸ்டுக்கு முன் இந்திய அணியின் அரணாக நின்றார்.
அவரது வழக்கமான சாதுர்யமான டைவ்ஸ் மற்றும் உள்ளுணர்வு விளையாட்டில் பிரதிபலித்தது. ஸ்பெயின் வீரர்கள் 9 பெனால்டி கார்னர்களைப் பெற்றனர், ஆனால் எதையும் அவர்களால் கோல் ஆக மாற்ற முடியவில்லை. கோல்கீப்பராக இந்த விளையாட்டில் அவரது திறனை புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீஜேஷ் மற்றும் அவரது குழு இறுதி வரை தங்கள் முன்னிலையை தக்கவைக்க போராடியது.