ஷா ஆலம், ஆகஸ்ட் 13-
கடந்த வாரம் சுபாங் ஜெயாவில் ஒரு எண்ணெய் நிலையத்தின் முன்புறம் பிரதான சாலையில் கம்புகளை ஆயுதமாக ஏந்திக்கொண்டு, கார் ஒன்றை மடக்கி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு ஆடவர்களில் ஒருவர், இன்று ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சாலை நடுவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, காரில் வந்திறங்கிய தங்களின் சகாக்களுடன் கூட்டாக சேர்ந்து ஒரு பெண் டெக்னிஷனை மடக்கி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்த ஆடவர் சம்பந்தப்பட்ட காணொளி, அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதன் தொடர்பில் பிடிபட்ட G. நாகேந்திரன் என்ற 32 வயதுடைய நபர், மாஜிஸ்திரேட் Sasha Diana Sabtu முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர், 37 வயதுடைய பெண்ணுக்கு சொந்தமான Yoyota Estima ரக காரின் கண்ணாடியை உடைத்து 100 வெள்ளி இழப்பு ஏற்படும் அளவிற்கு சேதம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் சுபாங் ஜெயா, KESAS நெடுஞ்சாலையின் முன்புறம் நாகேந்திரன் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஐந்த ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நாகேந்திரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
தவிர மறுநாள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாலை 5 மணியளவில் சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தற்கு உட்பட்ட USJ 8 போலீஸ் நிலையத்தில் methamphetamine போதைப்பொருளை விழுங்கியதாக நாகேந்திரன் மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
