புத்ராஜெயா,ஆகஸ்ட் 13-
ஜோகூர்,மஹ்கோட்டா சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்கூட்டியே வாக்களிப்பு, செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருன் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரையில் மஹ்கோட்டா தொகுதியில் 66 ஆயிரத்து 318 பதிவுப் பெற்ற வாக்காளர்கள் உள்ளதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ரம்லான் ஹாருன் இதனை குறிப்பிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு 14 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான செலவினம் 24 லட்சம் வெள்ளியாகும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி அம்னோவைச் சேர்ந்த மஹ்கோட்டா சட்டமன்ற உறுப்பினர் சியாரிஃபா அசிசா சையத் ஜைன் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.