செப்டம்பர் 04-
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
மாரியப்பன் தங்கவேலு இதற்கு முன்பாக, 2016 ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T42) தங்கமும், 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T63) வெள்ளியும் வென்றுள்ளார்.
இந்த நிலையில், மாரியப்பன் தங்கவேலுவை பாராட்டி, பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
“ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துக்கள். பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கங்களை வென்றது மிகவும் பாராட்டுக்குரியது. அவருடைய திறன்கள், தொடர் முயற்சி மற்றும் உறுதி அபூர்வமானவை” என்று தனது பாராட்டுக்களை மோதி தெரிவித்திருந்தார்.
கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்தார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்ற முதல் தங்கம் அது.
அந்த இறுதிப் போட்டியில், 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார். அதன் மூலம் புதிய சாதனையையும் படைத்தார். அதற்கு முன்னர், அதே சாம்பியன்ஷிப் தொடரில் ஷரத் குமார் தாண்டிய 1.83 மீட்டர் உயரமே சாதனையாக இருந்தது.