கோலாலம்பூர், செப்டம்பர் 06-
பல்வேறு மோசடித் திட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெறுதற்கு ஏஜெண்டுகளை தாங்கள் நியமித்துள்ளதாக கூறப்படுவதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று மறுத்துள்ளது.
இத்தகைய மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெறுவதற்கு எந்தவொரு தனிநபரையும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் ஏஜெண்டாக நியமித்தது கிடையாது என்று அதன் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
போலீஸ் துறையால் நியமிக்கப்பட்ட ஏஜெண்டுகளைப் போல சில கும்பல்கள், பாதிக்கப்பட்டவர்களை அணுகி அந்தப் பணத்தை திரும்ப பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி, நம்பவைக்கும் யுக்தியை கையாண்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ராம்லி முகமது குறிப்பிட்டார்.
தங்களை ஏஜெண்டுகள் என்று கூறிக்கொண்டு, பணத்தை இழந்தவர்களிடம் யாராவது அணுகுவாக்ளேயானால், அவர்களிடம், மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்யதியாளர்கள் கூட்டத்தில் ராம்லி முகமது இதனை தெரிவித்தார்.
இழந்தப் பணத்தை மீட்டெடுத்து, வங்கி கணக்கில் மாற்றிவிடுவதாக கூறி, இத்தகையை நபர்கள் வங்கிக் கணக்கை கேட்கக்கூடும். இதுவும் முன்பு நடந்ததைப் போல ஒரு வகையான மோசடி வேலைகளே என்று ராம்லி முகமது விளக்கினார்.