பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 11-
சிறார்கள் சுரண்டல் மற்றும் சித்ரவதை தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செயல்பட்ட வந்த 18 ஆதரவற்ற இல்லங்களிலிருந்து 402 சிறார்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
காப்பாற்றப்பட்ட 402 பேரில் 201 பேர் சிறுவர்கள் என்றும், 201 பேர் சிறுமிகள் என்றும் அனைவரும் 17 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்றும் ஐஜிபி குறிப்பிட்டார்.
சிறார்கள் சுரண்டல் மற்றும் சித்ரவதை தொடர்பில் இவர்கள் காப்பாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இல்லங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட OPS GLOBAL என்ற இந்த சோதனை நடவடிக்கையில் 171 தனிநபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறார்களுக்கு பாடம் போதித்தல், இல்லத்தை பராமரிப்பது உள்ளிட்டு பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 66 ஆண்கள் என்றும், 105 பெண்கள் என்றும் ஐஜிபி விளக்கினார். மீட்கப்பட்ட சிறார்கள் அனைவரும் சுகாதார சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதுடன் கோலாலம்பூர், போலீஸ் மையத்தில் அவர்களுக்கான அடையாள ஆவணம் தொடர்புடைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.