பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 26-
சிலாங்கூர் மாநில அரச பரிபாலனத்தை அவமதிக்கும் நோக்கத்தைக் கொண்டது என கருதப்படும்
அறிக்கையை வெளியிட்டதற்காக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி முஹமட் நோர் -, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, கேட்டுக்கொண்ட பகிரங்க மன்னிப்பை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, பெருமனதுடன் இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளையில் இனி வார்த்தைகளை உதிர்க்கும் போது மிகுந்த கவனம் தேவை என்று சனூசிக்கு அறிவுறுத்தினார்..
முஸ்லீம்கள் மற்றும் மலாய்க்காரர்கள் தங்களுக்கு இடையில் பேணி வருகின்ற UKHUWAH எனப்படும் சகோதரத்துவம் அடிப்படையில், சனூசியின் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அறிவித்துள்ளார்.
முஸ்லீம்கள் தங்களுக்கு இடையில் விரோத மனப்பான்மையை விதைக்கக்கூடாது. ஒருவர் தனது செயலுக்காக கேட்கப்படும் மன்னிப்பு, தூய உள்ளத்துடன் இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்று, மன்னித்து அருளும் மாண்பு, முஸ்லீம்களிடம் மலர வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் கோம்பாக், தாமன் செளயாங் முதியர -வில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம் ஆற்றிய, நிந்தனை தன்மையான உரைக்காக சிலாங்கூர் சுல்தானிடமும், சிலாங்கூர் மந்திரி பெசாரிடமும், சிலாங்கூர் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கெடா மந்திரி பெசார் சனூசி நேற்று அலோர் ஸ்டார் விஸ்மா டாருள் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தாம் வெளியிடக்கூடிய அறிக்கைகளில் தாம் மிகுந்த
கவனத்துடன் இருப்பதாகவும், அந்த அறிக்கைகள் கண்ணியமானதாகவும், மலாய் கலாசார பாரம்பரியத்தை காக்கும்
வகையிலும், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் அரச அமைப்பின்
கௌரவத்தை காக்கும் வகையிலும், இருக்கும் என்று சனூசி உறுதி கூறினார்..
சிலாங்கூர் அரச பரிபாலனத்திற்கு எதிராக சனூசியின் நிந்தனைக்குரிய கருத்துக்களால் அவருக்கு
எதிராக கடந்த ஜூலை 18 ஆம் தேதி 3R சட்டத்தின் கீழ் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.