கோலாலம்பூர், செப்டம்பர் 26-
வீடு புகுந்து திருடுதல் உட்பட 26 குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆடவர் ஒருவர், நேற்று அதிகாலையில் ரவாங், கம்போங் பாரு குண்டாங்-கில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தப்பிவிட்டதாக நம்பப்படும் அந்த நபரின், மேலும் இரண்டு சகாக்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் உட்பட தேடப்பட்டு வரும் அந்த இரண்டு நபர்களும் பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவில் ஒரு கடையில் புகுந்து கொள்ளையிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்த சம்பவத்தில் போலீசாரின் உத்தரவையும் மீறி தப்பிச்செல்ல முற்பட்ட ஒரு காரை போலீசார் சூழ்ந்துக்கொண்ட போது நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முன்னதாக அந்த நபர், போலீஸ்காரையும், பொது மக்களின் காரையும் மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
காஜாங்கை பூர்வீகமாக கொண்ட அந்த நபர், ரவாங் அருகில் சுங்கை சோ – வில் (சுங்கை சோவில் ) வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.
புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த இரு நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருவதாக டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.