சொத்து விவரங்களை அறிவிக்க எந்த நேரத்திலும் நான் தயார் / பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 26-

தம்முடைய சொத்து விபரங்களை அறிவிப்பதற்கு தாம் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

தம்முடைய சொத்து விபரங்கள் என்ன என்று யாராவது , நாளை கேட்டால்கூட தமது சொத்து விபரங்களை எவ்விவித தயக்கமின்றி – பிசிறின்றி மிகத்துல்லியமாக அறிவிப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தம்முடைய சொத்து விபரங்களை எங்கிருந்து தோண்டி எடுத்தாலும் அனைத்து விபரங்களும் ஒரே மாதிரியாகவே இருக்கும். மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தம்மை தயார்படுத்திக்கொண்ட பின்னரே நாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்றதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

மற்றவர்களின் சொத்து விபரங்கள் ஆராயப்படும் பட்சத்தில் அதனை பழிவாங்கும் செயல் என்று தம்மை நோக்கி சில தரப்பினர் வசைப்பாடி வருவதாக பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளையில் தம்முடைய சொத்து விபரங்களை வெளியிட தயாரா? என்று பலர் தமக்கு சவால் விடுத்த வண்ணம் உள்ளனர் என்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்க மானியம் கிடைப்பதற்கு டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அண்மையில் கருத்திணக்க ஒப்பந்தம் தொடர்பான பரிந்துரையை முன்வைத்து இருந்தது.

அந்த கருத்திணக்க ஒப்பந்தத்தில், மானியங்களை பெறுவதற்கு முன்பு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது சொத்து விபரங்களை முழுமையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமை கொறடா டத்தோஸ்ரீ தகியுதீன் ஹாசன் தெரிவித்து இருந்தார்.

சொத்து விபரங்கள் தொடர்பாக பாஸ் கட்சி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தகியுதீன் ஹாசன் கருத்துரைத்து இருப்பது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று எதிர்வினையாற்றினார்.

WATCH OUR LATEST NEWS