பாரிசான் நேஷனல் வேட்பாளருக்கு எந்தக் குற்றப்பதிவும் இல்லை

குளுவாங் , செப்டம்பர் 27-

ஜோகூர்,மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது. நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ள இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா – விற்கு குற்றப்பதிவு இருப்பதாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர்.

பாரிசான் நேஷனல் வேட்பாளருக்கு எந்தக் குற்றப்பதிவும் இல்லை என்பதை குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பஹ்ரின் முகமது நோ உறுதிப்படுத்தியுள்ளார்.

சையத் ஹுசைன், இதற்கு முன்பு ஒரு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு காயம் விளைவித்துள்ளார் என்றும், அவருக்கு எதிராக போலீஸ் குற்றப்பதிவு உள்ளது என்றும், பெர்சத்து கட்சியைச் சேர்ந்த செகுபார்ட் என்ற பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் குற்றஞ்சாட்டியிருந்தார். போலீஸ் குற்றப்பதிவை கொண்டிருக்கின்ற ஒருவர் இந்த இடைத் தேர்தலில் எவ்வாறு பாரிசான் நேஷனல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் கடந்த 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தில் பார்வை இழந்த ஒருவரை கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு அவருக்கு தொல்லைக கெடுத்த போது அவரை காப்பாற்றுவதற்காகவே பாரிசான் நேஷனல் வேட்பளார் சையத் ஹுசைன் போராடினார் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விளக்கம் அளித்து இருந்தார்.

மேலும் குற்றப்பதிவை கொண்டுள்ளதாக கூறப்படும் சையத் ஹுசைன், நிலை குறித்து சட்டத்துறை அலுவலகத்தில் பரிசோதித்துப் பார்த்த போது, அவருக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS