புத்ராஜெயா,செப்டம்பர் 27-
அடுத்த மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களை பாதித்து வரும் வாழ்க்கைச்செலவின உயர்வை சமாளிக்க வல்லதாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.
பொருட்களின் விலை உயர்வு, மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக இருந்து வருகிறது. விலை உயர்வு உட்பட மக்களின் வாழ்க்சைச்செலவினத்தை சமாளிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்னெக்கப்படுதற்கான முயற்சிகள் யாவும் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் உறுதி அளித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை போர்ட்கிள்ளான், Westports Malaysia Sdn. Bhd. நிறுவன ஊழியர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
எனினும் சில பொருட்களின் விலை உயர்வு கண்ட போதிலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலை உயர்வு, கடுமையாக இல்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
ஆசியான் பிராந்தியத்திலேயே சமையல் எண்ணெய், மாவு, சீனி போன்ற அத்தியாவசியப்பொருட்களின் விலை நமது நாட்டில் குறைவாகவே உள்ளது.
சீனியின் விலை சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிகையில் மலேசியாவில் குறைவாக உள்ளது.
அரிசி விலை, இந்தோனேசியா, தாய்லாந்தைவிட இங்கு குறைவாக கிடைக்கிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.